Monday, 23 September 2019

மேலவளவில் நவீன தொழில்நுட்ப நாற்றங்கால் பண்ணை plant nurseries in melavalavu





ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று மதுரை வேளாண் அறிவியல் நிலையம்  திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி.செல்வி ரமேஷ் அவர்களின் தலைமையில் முனைவர் திரு. இரா.அருண் குமார், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் அவர்களால்  மேலவளவு   உழவர் உற்பத்தியாளர் குழுவின் சார்பாக நவீன குழித்தட்டு மற்றும் நிழல்வலை நாற்று வளர்ப்பு முறையில்  நாற்றங்கால் பண்ணை துவங்கப்பட்டது.

மேலவளவு பகுதிகளுக்கு ஏற்ற மிளகாய் ரகங்களை விவசாயிகளே  கண்டறிய செயல் விளக்க திடல் அமைக்க மதுரை வேளாண் அறிவியல் நிலையம்  வீரிய ஒட்டு  மிளகாய் ரகங்களை  (கோ.சி.எச்1, ஆர்கா ஹரிட்டா மற்றும் நடைமுறை சாகுபடி ரகமான ப்ரியங்கா) வழங்கியது.அவற்றின் நாற்றுகளை உற்பத்தி செய்து இன்று விவசாயிகளுக்கு வழங்கியது. இன்று முதல் நாற்றை சிதம்பரம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தற்போது கத்தரி மற்றும்  தக்காளி நாற்றுகள் தேவையென   விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குழித்தட்டு சிறந்த முறை


 
நாம் உற்பத்தி செய்யும் நாற்றுக்கள் தரமாகவும் வீரியமுடனும், பூச்சி, நோய் தாக்குதல் இன்றி பேண வேண்டும். இதற்கு திறந்த வெளி நாற்று உற்பத்தியை அகலப்பாத்தி அல்லது மேட்டுப்பாத்தி மூலம் விதைத்தவாறு நிச்சயம் உற்பத்தி செய்யாது தவிர்த்தல் அவசியம்.

எத்தனை திட்டமிட்டு விதைகளை ஊன்றினாலும் நிச்சயம் விதைகள் முளைத்திட ஏற்ற சூழலை இதன் மூலம் ஏற்படுத்த வாய்ப்பு குறைவே. தனியாக விழுந்த விதைகள் மண்ணில் உள்ள நுண்கிருமிகள், வேர்ப்புழுக்கள், வண்டுகள் மூலம் பாதிக்கப்படுவதுடன் அதிகநீர் தேக்கம், அதிக வெயில் தாக்கம் மற்றும் வேகமாக வீசும் காற்றால் பாதிப்பு என வேறு பல காரணங்களாலும் நமக்கு தரமான நாற்றுக்கள் உரிய தருணத்தில் ஒரே சீராக சம உயரமாக நல்ல தண்டுப்பகுதி, அதிக சல்லி வேர்கள் நோய் தாக்காத இலைகள் கொண்டதாக கிடைக்காது.

நிழல்வலைகள் சூரியஒளியின் சூட்டை குறைத்து மட்டுப்படுத்திடும். தரமான நாற்றுக்கள் பெற 50 சதவீத நிழல் தரும் தன்மைக் கொண்ட பச்சை நிற வலைகள் சமவெளிப்பகுதிகளில் உதவுபவை.

நவீன குழித்தட்டு, நிழல் வலையில் வளர்க்கும் நாற்றுகளுக்கு வரவேற்பு
மகசூலை அதிகரிக்கும் நவீன குழித்தட்டு மற்றும் நிழல்வலை நாற்று வளர்ப்பு முறை விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது

வேளாண் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க கரும்பு, சாமந்தி, கத்தரி, சவுக்கு, முருங்கை, மிளகாய், துவரை, தக்காளி  உள்ளிட்ட வேளாண், தோட்டக்கலை, மலரியல் பயிர்களின் வீரிய ரகங்கள் அடிக்கடி அறிமுகப் படுத்தப்படுகின்றன. அதிக மகசூல் தரும் வீரிய ரக விதைகள் ஆயிரக்கணக்கில் (மிளகாய் நாற்று ஒரு கிலோ 35 ஆயிரம் ரூபாய்) விற்கிறது. இதை, நேரடியாக நிலத்தில் நாற்று விட்டால் பூச்சி, நோய் தாக்குகிறது. மேலும், நாற்று பிடுங்கும்போது சேதம் ஏற்படுகிறது. இதனால், மகசூல் குறைகிறது. இதைத் தவிர்க்க, குழித்தட்டில் நாற்றுகள் விடப்படுகின்றன.

நமது பண்ணைகளில் 98 குழிகள் கொண்ட குழித்தட்டில் தேங்காய்நார்க் கழிவுகளை நிரப்பி, வீரிய ரக விதைகளை ஊன்றி, நிழல் வலைகளில் வைக்கின்றனர். மிதமான வெப்பம், அளவான ஈரப்பதம், மென்மையான தேங்காய்நார்க் கழிவு உள்ளிட்டவைகளால் விதைகள் பழுதின்றி எளிதில் முளைக்கிறது.நிழல் வலையில் வளர்க்கப்படுவதால் பூச்சி, நோய் தாக்குதலின்றி தரமான நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

குழுவின் நோக்கம்



வேளாண்மை  மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த அனைத்து பயிர்களின் நாற்றுகளை நவீன தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்து நமது  பகுதி விவசாயிகளிடம் தரமான நாற்றுகளை குறைவான  அல்லது மானிய  விலைகளில் கொண்டு சேர்ப்பது மற்றும் மகசூலை அதிகரித்து விவசாயிகளின் வருவாயை பெருக்குவது  குழுவின் நோக்கமாகும்

விதை பண்ணைக்கான குழுவின்  பயணம்
விதை பண்ணையை கருத்தில் கொண்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கோடை கால பயிற்சியில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பற்றிய முகாமில்   நமது குழுவிலிருந்து   சௌந்தரராஜன் , கவி சர்மா மற்றும் ராஜேஷ் கண்ணா  கடந்த கோடை காலத்தில் பயிற்சி பெற்றனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் , மதுரையின் மூலம் நடத்திய ஒரு மத கால skill training program  ல் தேனீ வளர்ப்பு மற்றும் நாற்றாங்கால் பராமரிப்பு பயிற்சியை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் ரதிஷ்  பெற்றுள்ளனர் . அதற்க்கான சான்றிதழை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலமாக வழங்கப்பட்டது.

தற்போது தோட்டக்கலையின்  தொழில் பழகுநர் ஓராண்டு பயிற்சி  திட்டத்தில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பயிற்சியில் உள்ளனர்.






Wednesday, 18 September 2019

சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு

 மேலவளவு 17/09/2019

சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் மரம் நடும்  நிகழ்வு


மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடைபெற்ற சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு இன்று (17/09/2019) மேலவளவு மற்றும் குன்னராம்பட்டி கிராமங்களில் நடைபெற்றது.

 மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள்  முனைவர் இரா.அருண் குமார், முனைவர் சீ.கிருஷ்ணகுமார், முனைவர் உஷா ராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று மேலவளவு ஒடுங்காண் குளத்தில் நடைபெற்ற  நிகழ்வில் ஒடுங்காண் குள பாசன தாரிகள் மற்றும்  மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் முதல் கன்றை நட தொடர்ந்து  முனைவர் இரா.அருண் குமார், முனைவர் சீ.கிருஷ்ணகுமார், முனைவர் உஷா ராணி, ஒடுங்காண் குளம் பொறுப்பாளர் திரவிய பாண்டி ,  மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் சிதம்பரம் ஆகியோர் நடவு செய்தனர்.

தற்போது  ஒடுங்காண் குளம் பாசன தாரிகள் மற்றும்   தானம் வயலக அறக்கட்டளை உதவியுடன் விவசாயிகளால் குடிமராமத்து பணி சிறந்தமுறையில் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் மேலவளவு துணை மின் நிலைய கட்டு மான பணிகள் நிறைவடையும் தருவாயில்  பார்வையிட்டனர்




Thursday, 12 September 2019

தேசிய அளவிலான கால்நடை நோய் தடுப்பு, செயற்கை கருவூட்டல் முகாம் மற்றும் தூய்மையே சேவை இயக்கம் துவக்க விழா

 மேலவளவு, 11/09/2019

தேசிய அளவிலான கால்நடை நோய் தடுப்பு, செயற்கை கருவூட்டல்  முகாம் மற்றும் தூய்மையே சேவை இயக்கம் துவக்க விழா




நேற்று  (11/09/2019) தடுப்பூசி, நோய் மேலாண்மை, செயற்கை கருவூட்டல் மற்றும் உற்பத்தித்திறன் குறித்து இந்தியாவின் 687 மாவட்டங்களிலும் வேளாண் அறிவியல் நிலையங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஒரே நேரத்தில் நாடு தழுவிய விழிப்புணர்வு முகாம்களை  தொடங்கினார்.

மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி வட்டாரம்  மேலவளவு கிராமம் வீரகாளி அம்மன் கோவில் திடலில்  மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் தேசிய அளவிலான கோமாரி நோய், கருச்சிதைவு  நோய் தடுப்பு செயற்கை கருவூட்டல் முகாம்  தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

மாண்புமிகு  மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு பெ.பெரியபுள்ளான் என்ற  செல்வம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன் அவர்கள் முன்னிலையில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைவர் கு.செல்வராணி, முனைவர் இரா.அருண் குமார், முனைவர் சீ.கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொட்டாம்பட்டி வேளாண்மை துறை சார்பாக  வேளாண்மை உதவி இயக்குனர் மதுரை சாமி, உதவி வேளாண்மை  அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கால்நடை துறை சார்பாக  மருத்துவர்கள் R.விவேக்குமார்,  B.ரமேஷ் , L.சிவகுமார் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு  உறுப்பினர்கள் மற்றும் மேலவளவு பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

முகாமில் 430 செம்மறி ஆடு, வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மருந்தும் 430 செம்மறி ஆடு, வெள்ளாடுகளுக்கு தடுப்பூசியும்,  47  கால்நடைகளுக்கு சிகிச்சையும் 5 மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல்  மொத்தம் 1002  கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.







Tuesday, 10 September 2019

மேலவளவில் விவசாயிகள் ஓய்வூதியம் திட்டம் பதிவு முகாம்

மேலவளவில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் பிரதமரின் மான் தன் யோஜனா திட்டம் பதிவு முகாம்

இடம் : வீரகாளி அம்மன் கோவில் திடல், மேலவளவு

தேதி :  11/09/2019 காலை 9 மணி முதல் 11 மணி வரை
 
 18 முதல் 40 வயது வரையிலான விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

இதற்கான பதிவு நாளை காலை 9 மணி முதல் மேலவளவு வீரகாளி அம்மன் கோவில் திடலில் நடைபெறும்

 
தேவையான ஆவணங்கள்
 
1. ஆதார் அட்டை (பிறந்த தேதி இருக்கவேண்டும் )
 
2.வாரிசு தரரின் ஆதார் அட்டை (பிறந்த தேதி இருக்கவேண்டும் )
 
3. வங்கி கணக்கு புத்தகம் 


இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு

மேலவளவில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்

இடம் : வீரகாளி அம்மன் கோவில் திடல், மேலவளவு

தேதி :  11/09/2019 காலை 8 மணி
மதுரை வேளாண் அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வருகைதரவுள்ளனர்

நிகழ்வுகள்
- ஆடு மாடுகள் பராமரிப்பது பற்றிய விழிப்புணர்வு

- மழை காலங்களில் வரும் நோய்களிடமிருந்து ஆடு மாடுகளை காப்பாற்றுவது பற்றிய விழிப்புணர்வு
 
- ஆடு மாடுகளுக்கு உன்னிக்கு மருந்து  வழங்கப்படும்

- ஆடுகளுக்கு மழை காலங்களில் வரும் நோய்களுக்கு தடுப்பூசி  போடப்படும்

- மாடுகளுக்கு சினை ஊசிகள் ( வீரியம் மிக்க தரமான மாடுகளிருந்து பெறப்பட்டவை)   போடப்படும்

அனைத்து விவசாயிகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு

Thursday, 5 September 2019

Sep 2019 - மேலவளவில் வேளாண் அறிவியல் நிலையம் வயல்வெளி ஆய்வு

04-09-2019

 
வாழை உற்பத்தியில் நுண்ணுட்ட சத்துக்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மேலவளவில் வேளாண் அறிவியல் நிலையம்  மூலம் செயல்விளக்க திடல் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளிடையே  அமைத்துள்ளனர்.

நேற்று திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் முனைவர் சீ.கிருஷ்ண குமார்  அவர்கள் மேலவளவில் வயல்வெளி ஆய்வு மேற்கொண்டு  வாழை செயல்விளக்க திடலை பார்வையிட்டார். கடந்த மாதம்  பனானா சக்தி (வாழை நுண்ணுட்டக் கலவை) பயன்பாடு குறித்து மேலவளவு  உழவர் உற்பத்தியாளர்  குழு விவசாயிகளுக்கு   நேரடி செயல்விளக்கமளித்திருந்தனர். அது குறித்த ஆய்வினை மேற்கொண்டனர்.

மேலும் வாழையில் உரம், பூச்சி  மற்றும் நீர் மேலாண்மை பற்றிய கருத்துக்களை விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.